Wednesday, July 2, 2014

டங்ஸ்டன் உலோகங்களின் ராஜா!

எந்த உலோகத்தையும் உடைக்கக் கூடிய, அறுக்கக் கூடிய உறுதியான உலோகம் டங்ஸ்டன். 1781ல் வில்ஹெம் ஷீல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட டங்ஸ்டன், இன்று நம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமாகப் புழங்கிக்கொண்டிருக்கிறது. டங்ஸ்டனால் உருவாக்கப்பட்ட சில மின்சாதன பாகங்களை காட்சிக்கு வைத்து, அதைப் புலப்படுத்தினார்கள் சென்னை அருங்காட்சியகத்தினர். கூடுதல் தகவல்களை காப்பாட்சியர் சேகர் தந்தார்… ‘‘டங்ஸ்டன் எல்லா உலோகங்களைப் போலவும் பூமிக்கு அடியில்தான் கிடைக்கிறது. ஆனால், மற்ற உலோகங்களைப் போல அல்லாமல் மிகக் கடினமான பாறைகளுக்கிடையே படிமமாக அது இருக்கிறது. டங்ஸ்டன் அதிகமாகக் கிடைக்கும் இடங்கள் எரிமலைப் பிரதேசங்களே. எரிமலைக் குழம்பினாலும் உருக்க முடியாத அளவுக்குக் கடினத்தன்மையுடையது டங்ஸ்டன்.
1781ல் இந்தக் கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், டங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டது. பின்னர், 1783ல் ஜோஸ் மற்றும் ஃபாஸ்டோ என்ற ஸ்பெயின் நாட்டுச் சகோதரர்களால் உல் ஃபிரமைட் எனும் இன்னொரு கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டபோதுதான் டங்ஸ்டனின் நிஜமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது எனலாம். எனவேதான் இன்று டங்ஸ்டன் உல்ஃபிராம் என்றும் அழைக்கப்படுகிறது. உல்ஃபிராம் என்ற பெயரின் ஆரம்ப எழுத்தான டபிள்யூதான் டங்ஸ்டனின் வேதியியல் பெயராக இருக்கிறது. உல்பிரைட்டின் அணு எண் 74. பூமிக்கு அடியில் டங்ஸ்டன் மற்ற தனிமங்களுடன் கலந்து கிடப்பினும், அது பூமிக்கு வெளியே வரும்போதுதான் கடினமான பொருளாக மாற்றம் அடையும். கடினமான இதை மறுபடியும் உருகும் நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்றால் மற்ற உலோகங்களைவிட அதிகமான வெப்பத்தில் சூடேற்ற வேண்டும்.
உரு மாற்ற முடியாத இந்தத் தன்மையினால்தான் இரும்பு மற்றும் நிக்கல் போன்ற உலோகங்களோடு இது கலக்கப்பட்டு, பல்வேறு எரிநிலையைத் தாங்கும் மின்சாதனங்கள் மற்றும் ராணுவ தளவாடப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இந்த உலோகத்தை உலகப் பிரசித்தமாக்கியது. மின் சாதனப் பொருட்களில் பல்புகள், கண்டக்டர்கள், டி.வி பிக்சர் ட்யூப்கள், வேக்யூம் க்ளீனர்கள் போன்றவற்றிலும், ராணுவப் பயன்பாட்டில் புல்லட், ஏவுகணை, ராக்கெட், பீரங்கி போன்றவற்றிலும் டங்ஸ்டன் அதிகம் பயன்படுகிறது. இன்னும் இந்த டங்ஸ்டனைப் பயன்படுத்தி செராமிக் பொருட்களை உடையாமல் உறுதியாக்குவது போன்ற ஆராய்ச்சிகள் தொடர்கின்றன’’ என்றார் அவர். இனிமேல், மோசமான மனிதர்களைப் பார்த்து உங்கள் மனம் என்ன இரும்பா/ கல்லா என்று கேட்காதீர்கள். ‘டங்ஸ்டனா’ என்று கேட்டு மிரள வையுங்கள்!


No comments:

Post a Comment