Monday, July 14, 2014

வினைத்தொகை,பண்புத்தொகை


 வினைத்தொகை என்றால் என்ன?
     
        மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது? 

         வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

       ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

         இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

          ஊறிய காய்-இறந்த காலம்
          ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
          ஊறும் காய்-எதிர்காலம்

         இப்பொழுது மூன்று காலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப்போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்..

(எ.கா)

1)படர்கொடி

   படர்ந்த கொடி-இறந்த காலம்
   படர்கின்ற கொடி-நிகழ்காலம்
   படரும் கொடி-எதிர்காலம்

2)சுடுசோறு

   சுட்ட சோறு-இறந்த காலம்
   சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
   சுடும் சோறு-எதிர்காலம்

3)குடிநீர்
   
   குடித்த நீர்-இறந்த காலம்
   குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
   குடிக்கும் நீர்-எதிர்காலம்
        
         கொடுக்கப்பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப் பாருங்கள்..முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று.ஒரு விடை மட்டும்தான் முக்காலத்தையும் உணர்த்தும்.மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம்.தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டு பிடிக்கலாம்.

பண்புத்தொகை என்றால் என்ன?

        ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

 (எ.கா)   செந்தாமரை

        (முன்னதாக பெயர்ச்சொல் வகையறிதலில் பண்புப்பெயரை பற்றி படித்தோம் ஞாபகம் இருக்கிறதா? வேண்டுமானால் அந்த பாகத்தை மீண்டும் ஒருமுறைப் படித்து பண்புப்பெயரை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.)

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

      கொடுக்கப்பட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி  வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக..
     
        (ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம்.பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு ஐந்து வினாக்கள் கேட்கப்படும்..அதை பிறகு பார்ப்போம்)

         'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை+தாமரை என்று பிரியும்.
   
        'மை' விகுதி தெரிகிறதா..ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால்தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை,நீலம்,வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை,தீமை,கொடுமை,பொறாமை

சுவையைக்குறிக்கும் சொற்கள்:

காரம்,புளிப்பு,கசப்பு

வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம்,வட்டம்,நாற்கரம்

 இருபெயரொட்டுப் பண்புத்தொகை

      சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப்பெயர்கள் பின்னும் நின்று இடையில்
“ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா)
சாரைப்பாம்பு, நாகப்பாம்பு,
இந்திய நாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண்
வாழை மரம்.
தாமரைப் பூ
பொருட்செல்வம்
கடல் நீர்
தைத்திங்கள்
அவி உணவு
அரவணை
செருக்களம்

No comments:

Post a Comment